மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : T .சௌந்தர்

படைப்பின் மூலங்களும் நீரோட்டங்களும்:
படைப்பின் வழியே கலைஞர்கள் தங்களை தருகிறார்கள். அதன் மூலம் தனது உழைப்பை படைப்பூக்கத்துடன் வழங்கும் கலைஞன் நிம்மதியாகத் தனது பாரத்தை இறக்கிவைக்கிறான். அந்தப்படைப்பை உள்வாங்கும் ஒருவன் அதில் லயித்து அதற்கு ரசிகனாகிறான். கலைஞன் படைப்பால் ரசிகன் புது அனுபவம் பெறுகிறான். உள்ளத்தைச் சுண்டியிழுக்கும் அந்தப்படைப்பின் மூலம் பரவசமும் அடைகின்றான் படைத்தலும்,அதனால் விளையும் பரவசமும் வெவ்வேறு நிலைகளில் இயங்குகிறது.”இன்பம் தரவும் ,பெறவும் பயன்படுத்தப் பெறுகிற சாக்கு இருக்கிறதே இது தான் கலை ” என்பார் அன்னதா சங்கர் ராய்.[கலை – அன்னதா சங்கர் ராய், பக்கம் 5]

மனம் முழுவதும் பாடலில் பறிகொடுக்கும் ஒரு ரசிகன் பாடலில் ஒளிந்திருக்கும் நூதனங்களையும் , இசையமைப்பாளரின் உளப்பாங்கையும் உணரத் தலைப்படுகிறான். இசை ரசனையின் விரிதளத்தில் பயணிக்கும் ஒரு இசை ரசிகன் அந்தப் பயணத்தின் பலனாய் புதிய தேடலுக்கும் ஆட்படுகிறான். ரசிப்பின் அனுபவம் என்பது, நாளடைவில் இசையைப் படைத்த படைப்பாளிகள் எங்கனம் தமது படைப்பின் ரகசியங்களை மறைக்க முயன்றதையும் , அதன் பயனாய் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளுக்கு பலவிதமான மாறுவேடங்களை புனைந்து உலாவிடுவதையும் கண்டு ரசிக்கவும் செய்கிறான்.

இசையமைப்பாளர்கள் தாம் அனுபவித்த பிறரது படைப்புகளில் தம்மைக்கவர்ந்த அம்சங்களை நுட்பமாகக் கையாளும் போது அவை வெளியே துருத்திக் கொண்டு நிற்காதவண்ணம் காண்பிப்பதும் தங்களது இசைக்குள் அவற்றை அமிழ்த்திச் தங்கள் படைப்பிற்கு வளம் சேர்ப்பதையும் காண்பதை ரசிகனின் விரிந்த ரசனை பெற்றுக்கொடுக்கிறது. பரந்துபட்ட இசைரசிப்பு ரசிகனின் நுண்ணிய , ஆழமான பார்வையையும் விரிவடைய செய்கிறது. இசை ரசனையை புதிய தளத்திற்கு இட்டுச் செல்கிறது.

“இசையமைப்பு” என்ற படைப்பு செயற்பாட்டில் ஒரு படைப்பாளியின் சுதந்திர உணர்வு திரைப்படத்தை சார்ந்து இயங்குவதும் அதற்கப்பால் பரந்த ரசிகர்களைச் சார்ந்தும் இயங்குவதால் இசையமைப்பாளர்கள் எங்கெல்லாம் இசைப்பயணம் நடாத்தினார்கள் கண்டு கொள்ள ஏதுவாகிறது.இசையின் விரிந்த பயணத்தின் பலனாக இசையின் குறிப்பிட்ட இசைத்துணுக்குகள் சில கணங்களிலே முகம் காட்டி கரைந்து செல்வதையும் ,சில இசைத்துணுக்குகள் பூதாகாரமாகக் காட்டப்படுவதையும் வேறு சில பாடல்களில் மிக இயல்பாய் செல்வதையும் அவதானிக்கிறான்.

கலைஞர்கள் நாடுவது முழுமையான சுதந்திரம் என்ற வகையில் . சினிமாவில் அது எல்லா நேரமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. குறிப்பாகத் தமிழ் சினிமாவில் பணபலம் கொண்ட தயாரிப்பாளர்களும் , புகழ்பலம் கொண்ட நடிகர்களும் தங்கள் தகுதியை மீறி தேவையற்ற அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த காலம் என்பது மெல்லிசைமன்னர்களின் காலமாக இருந்தது.

ஒருமுகப்படுத்தி நிற்கவேண்டிய இசையமைப்பாளர்களது படைப்பின் இலக்கு பலதிசையிலும் சிதைக்கப்பட்டது. பரிசோதனை முயற்சிகளை எண்ணிப்பார்க்க முடியாத சோதனையான காலம் என்று சொல்லலாம். இது போன்ற தடங்கல்களை ஒருவிதமான பொறுமையோடு தான் அவர்கள் சகித்துக் கொண்டார்கள். கலைத்துரையாயினும் , தொழில்நுட்பத் திறனாயினும் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் கூட நடிகர்களுக்கு கீழ்ப்படிந்தே செயல்பட நேர்ந்தது. இசையைப் பொருத்தவரையில் ஒருவிதமான தத்தளிப்பே நியதியாக இருந்தது.

இசைப்படைப்பின் போது மேலெழும் அசாதாரண அகஎழுச்சியலை , வினோதமான கற்பனை வளம் கொண்ட தயாரிப்பாளர்கள்,நடிகர்களால் அதன் ஜீவ ஓட்டம் சிதைக்கப்பட்டன.

எனினும் அதை மீறமுடியாத இசைக்கலைஞன் தயாரிப்பாளர்கள் , நடிகர்களைக் குசிப்படுத்தும் ஒரு முறையைக் கையாண்டு, அவர்கள் ஏற்கனவே கேட்ட இசைமாதிரிகளை ஜாடைகாட்டி தற்காலிக விடுதலை பெற்றுவிடுகிறான்.சினிமாவின் வணிகம் சார்ந்து எழும் நிர்பந்தங்கள் இசையமைப்பளர்களை அடிபணிய வைத்திருக்கிறது. இவை போன்ற தடைகளையெல்லாம் தாண்டி நல்ல பாடல்களை அவர்கள் தந்தது தான் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விஷயமாகும்!

தங்கள் இசையின் நடை சிறப்பையும், எளிமையையும் வெளிப்படுத்த அவர்கள் இசைச்சிலம்பம் ஆடவில்லை.போகிற போக்கில் இயல்பாய் அமைந்த நடையைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள். அதுவே அவர்களின் படைப்பாற்றலாகவும் விளங்கின.

ஒரு சிறிய இசைத்துணுக்கை வைத்துக் கொண்டு அதனை குழைத்துக் குழைத்து கேட்பவர்களை பிரமிக்க வைப்பது, அதனைப் புதிய ,புதிய சங்கதிகளை போட்டு வளப்படுத்துவது என தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் இசைஜுவாலைகளில் எரியவைத்தார்கள். போடும் ஒவ்வொரு விதம்விதமான மெட்டிலும் இனிமையைக் குழைத்து அவர்கள் எதைத் தெரிந்தெடுப்பது என திக்குமுக்காட வைத்தார்கள்.

மெல்லிசைமன்னர்கள் இசை அமைத்து நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காத அல்லது ஒலிப்பதிவாகாத மெட்டுக்கள் எல்லாம் காற்றோடு காற்றாகக் கரைந்தன. சில பாடல்கள் வேறு சில படங்களுக்கு மாற்றியும் கொடுத்ததால் தப்பின. உதாரணமாக :

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் – [ பாலும் பழமும் ] அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் [ காதலிக்க நேரமில்லை ]

போன்ற பாடல்கள் வேறு படங்களுக்கு போடப்பட்ட மெட்டுக்களாகும். மெல்லிசைமன்னர் வேறு பல பாடல்களை இந்த வகையில் வெவ்வேறு படங்களில் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டார். சில பாடல்களை சாயல்களை, சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு மாற்றியும் கொடுத்து அவர்களை திசை திருப்பி வைப்பார். அவை ஒரே மெட்டு என்பதை அவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத வண்ணம் கொடுத்திருக்கின்றார் . குறிப்பாக எம்.ஜி.ஆர் – சிவாஜி படங்களில் கொடுத்திருக்கின்றார். ஒரே மேட்டை இரண்டு நடிகர்களுக்கும் விதம் விதமாக மாற்றி கொடுத்தார். உதாரணமாக .

அந்த மாப்பிளை காதலிச்சான் [ எம்.ஜி.ஆர் ] பணம் படைத்தவன்1965 அம்மாக்கண்ணு சும்மா சொல்லு [ சிவாஜி ]

இவ்விதம் விதம்விதமான மெட்டுக்களை பலவிதமான இசை ஊற்றுக்களிலிருந்து அவர்கள் பெற்றிருப்பதை காண முடிகிறது. ஒரே மேட்டை வைத்துக் கொண்டே பலவிதமான ஜாலங்கள் காட்டுவது ,தாள நடைகளை மாற்றுவது என மாந்திரீகர்களுக்குரிய வகையில் வித்தைகளைக் காட்டினார்.

இக்கட்டுரை அந்த மூலங்களைத் தேடிய பயணமாக அமைகிறது.

காற்றில் மிதந்துவரும் பூவின் வாசம் ஒருகணம் நம்மைத் தழுவி மறைந்து விட்டாலும் அதன் நறுமணத்தை மனதில் நிறுத்தி சென்று தான் தனித்துவத்தின் சுவடுகளை நெஞ்சில் பதித்து செல்வது போல , அல்லது அதன் நறுமணம் நம்மில் ஒட்டிக்கொள்வது போல இசையின் உயிர்வீசும் நறுமணத்துகள்கள் நம் மனதில் இனம்புரியாத அர்த்தங்களை , உணர்வுகளை புதைத்துவிட்டு சென்று மறைகின்றன. வாசத்திற்கும் இசைக்கும் நம் நினைவுகளை மடைமாற்றும் அற்புத சக்தி இருக்கிறது.

நிலத்தில் விழும் விதை முளைத்து மரமாகி ,விழுது விட்டு ஒன்றில் ஒன்று தங்குவது போல ,ரசிக்கும் இசைத்துணுக்குகள் தோற்றுவிக்கும் உணர்வுகள் விதையாகி நிலைத்துவிடுகின்றன.படைப்பில் இயங்கும் ஒரு பொழுதில் ஒரு கலைஞனின் அந்த ரசத்துளிகள் தன்னிச்சையாக போகிற போக்கில் கலந்தும் விடுகின்றன.ரசத்துளிகள் தரும் உணர்ச்சி அலை மேதைகளின் படைப்புகளில் தோன்றி புதிய வடிவம் பெற்றுவிடுகின்றன.கலாபூர்வமாகப் பார்க்கும் விதத்தில் , அல்லது வெளிப்படுத்தும் விதத்தில் வெவ்வேறு விதமாக அமைந்து விடுகின்றன.

கலைகளில் புதிய ,புதிய அம்சங்கள் சேர்மானம் அடைவது போல் சில கதைகள் புதிய வடிவங்களில் கலைவடிவமாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன அவை திட்டமிட்டும் செயற்படுத்தப்பட்டு வந்திருப்பதை ஆள்பவர்களின் ஆதிக்கத்தின் தந்திரமாக இருப்பதையும் காண்கிறோம்.

இந்திய சூழலில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள பார்ப்பனீயம் மகாபாரதம் , ராமாயணம் , அரிச்சந்திரா போன்ற கதைகளை பல்வேறு வடிவங்களில் , பல்வேறு கலாச்சார சூழலுக்குதக்கவாறு தகவமைப்பதை வரலாறு முழுவதும் காண்கிறோம். எழுதப்படிக்கத்தெரியாத ஒரு இந்தியனுக்கும் மகாபாரதம் ,ராமாயணம் அத்துப்படியாகத் தெரியும் என்பதே அதற்குச் சான்றாகும். இடைவிடாத பிரச்சாரத்தால் அவை மக்கள் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

படைப்பாற்றல் என்பது சூனியத்திலிருந்து உதிப்பதில்லை. எந்த ஒரு படைப்புக்கும் ஒரு ஆதார மூலம் இருக்கிறது. அதே போல உலகப்புகழ் பெற்ற கலைவடிவங்கள் பலவும் மீள ,மீள வெவ்வேறு விதங்களில் வடிவம் எடுத்து வந்திருக்கின்றன என்னும் உண்மையிலிருந்து இதற்கான எடுத்துக்காட்டை நாம் கூறலாம். ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்கள் சேக்ஸ்பியரின் நாடகத்தை உலகெங்கும் பரப்பி அதற்கான தனி மரியாதையை ஏற்படுத்திநார்கள். இருபதாம் நூற்றாண்டின் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஏற்பட்ட கலாச்சார பரிவர்த்தனையின் விளைவாய் நாடகத்துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் இந்தியாவில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அறிமுமாகியதுடன் .பார்சி நாடகம் ஐரோப்பிய நாடகங்களின்மரபுகளை உள்வாங்கியது.

பார்சி நாடகத்தின் தாக்கத்தால் தமிழ்நாடகமும் மாற்றம் கண்டது. சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக அரங்கம் பார்சிநாடகத்தை உள்வாங்கி தமிழ் மக்கள் இசையும் இணைத்த வண்ணம் வளர்ந்தது. சங்கரதாஸ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல சம்பந்தமுதலியாரின் நாடகங்கள் சேக்ஸ்பியரின் நாடக மொழி பெயர்ப்புகளுடன் வசனங்களையும் ,தமிழர் பாரம்பரியங்களையும் இணைத்து உருவாகியது.

ஒரு காலத்தின் தேவைகளை ஒட்டி பிறக்கும் படைப்புக்கள் கலை நுணுக்கத்தால் நிலை பெற்று மரபாகி நிலைபெற்று விடுகின்றன. கால ஓட்டத்தில், குறிப்பிட்ட அந்தக் காலத்திற்குப் பொருந்தாவிட்டாலும் அந்த மரபின் ஈர்ப்பில் மயங்கும் ஒரு கலைஞன், அதனை உயிர்ப்புடன் தனது சொல்லும் திறன் கொண்டு இயம்பிக்காட்டுவதால் தனித்தன்மை மிக்க ஒன்றாக மாற்றுகிறான். பாமரத்தனமான இந்திய , இதிகாச , புராணக் கதைகள் எல்லாம் இவ்விதமாக திரும்பத் திரும்ப புதிய கலை வடிவங்களில் புகுந்து நிலைத்து நிற்கின்றன. இன்றைய காலத்தில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இதிகாசக்கதைகள் எல்லாம் மீண்டும் . மீண்டும் சுழன்றடிக்கும் துர்ப்பாக்கியமும் நிகழ்கிறது.

தமிழ் சினிமா இசையைப் பொறுத்தவரையில் பலவிதமான இசை, வாத்தியங்கள், நுணுக்ககங்கள் என பலவற்றை புதுமையாகக் கையாண்டவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்ற ரீதியில் அவர்களது படைப்புகளில் பிறரது படைப்புகளின் சில அம்சங்கள் மட்டுமல்ல அவர்களே இசையமைத்த சில பாடல்களின் அம்சங்கள் புதிய ,புதிய பாதைகளிலும் திரும்ப திரும்பவும் வந்துள்ளன என்பதையும் காண்கிறோம். பலவிதமான இசைவகைகளின் போக்குகளெல்லாம் எவ்விதம் அவர்களது இசையில் கலந்து கொடுத்துள்ளார்கள் என்பதை அவதானிப்பது ரசனையைத் தூண்டுவதுடன் அவை பற்றிய சிந்தனைகளையும் தூண்டுபவைகளாக இருக்கின்றன.

சில பாடல்களை கேட்ட மாத்திரத்தில் அதனுடைய அசைவுகள் மனதில் இனம் புரியாத சலனங்களை எழுப்புகின்றன. எங்கோ ஓர் இடத்தில் ஒருகணத்தில் நழுவித் போகும் மெட்டின் ஒரு கணத்துளி ரசவாதம் உண்டாக்கிவிடும். அதை எங்கோ கேட்டிருக்கின்றோம் என்ற ஆவலை நம்முள் அவை தோற்றுவிக்கின்றன.அதை நாம் திரும்பத் திரும்ப கேட்கும் பொழுது, குறிப்பாகப் பாடும் பொழுது நமது ஞாபகக் கதிர்கள் பாய்ந்து நினைவு நரம்புகளில் ஒளியைப்பாய்ச்சி தட்டியெழுப்புகின்றன. செவியில் நுழைந்து இதயத்தில் எங்கோஒரு மூலையில் தங்கிவிட்ட ஒளிப்பிழம்புகள் ஒளிரத்தொடங்குகின்றன. இந்த அனுபவம் பலவிதமான ஒலிகளைக் கேட்டுப் பழகிய எல்லோருக்கும் பொதுவாக அமைவதில்லை. ஆனால் இசையில் ஈடுபாடும் ,கூர்மை நுணுக்கத்துடன் கேட்பவர்கள் இலகுவில் கண்டடைந்து விடுவர். அவை நீரோட்டத்தில் வருகின்ற அலையில் திடீரென தோன்றி மறைகின்ற குமிழிகள் போல மாயவித்தைகளை மனதில் தோற்றுவிக்கின்றன. இந்த ரசவாத மாயவித்தைகளை மிக இயல்பாக செய்து காட்டும் இசைக்கலைஞர்களை நாம் வியக்கும் அதே வேளை அதற்கான அவர்களின் முன்முயற்சிகளையும் எண்ணி பார்க்கின்றோம்.

இவை ஒருபுறமிருக்க இசையமைப்பாளர்களின் பாடல்களை ரசித்து பின் அவர்களுக்கு “தீவிர” ரசிகர்களாகி அவர்களை பாராட்டுவதும் , கடந்து போன காலங்களை நினைத்து ஏங்குவதும் பழம்பெருமை பேசுவதும் இவர்களைத் தாண்டி இசை வளரவில்லை என்று கூறவிழைவது என்பது குருட்டுத்தனமாதாகும். அதை விஸ்வநாதனின் ரசிகர்கள் என்று சொல்பவர்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லையாயினும் மறைமுகமாக செய்து வருகின்றார்கள். அதை அவர்கள் தர்க்க ரீதியில் விளக்கவும் முடியாது. அதுமட்டுமல்ல இந்த ரசிகர்கள் தமிழ் பாடல்களைத் தாண்டி இசையைக் கேட்கமுடியாதவர்களாயும் இருக்கின்றார்கள் என்பதையே இவை காட்டுகின்றன.

ரசிகர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் சந்திப்புக்கள் அல்லது கூட்டங்கள் மெல்லிசைமன்னர்கள் பற்றிய மிகைப்படுத்தல்கள், குறிப்பாக வெளிநாட்டு இசைகளை இப்படி பயன்படுத்தியுள்ளார் ,அப்படிப் பயன்படுத்தியுள்ளார் என கருத்துக்களை அள்ளி வீசுவது போன்ற அறியாமையை இலகுவில் காணக்கூடியதாய் இருப்பதை நாம் காண முடியும்.

மெல்லிசைமன்னரை மிகைப்படுத்துவதென்பது மிகுந்த உள்நோக்கத்ததுடன் நடாத்தப்படுவதாகவே தெரிகிறது. குறிப்பாக இளையாஜாவை மறைமுகமாக நிராகரிப்பதை மெல்லிசைமன்னரின் ரசிகர்கள் என்ற பெயரில் தங்களை உயர்சுவை கொண்டவர்களாகக் கருதும் சிலர் செய்துவருகின்றனர். குறிப்பாக மெல்லிசை மன்னர் காலத்தில் அறிமுகமான ஒரு சில வாத்தியங்களை ” இதை ” அவர்தான் அறிமுகப்படுத்தினார் அதுமட்டுமல்ல இதை வேறு யாராலும் செய்ய முடியாது என்று உளறுவார்கள். ஒருவர் தனது உரையில் விஸ்வநாதனின் ஒரு பாடலின் நடுவில் வரும் வயலினைக் குறிப்பிட்டு ” இப்படியெல்லாம் வயலினை வாசிக்க இன்று யாராவது இருக்கிறார்களா ” என்கிறார்!

மனசுக்கு இசைந்த வண்ணம் சபையில் இருப்பவர்களை மகிழ்வூட்ட பேசுவதும் ஒரு போக்காகவும் மட்டுமல்ல சில வேளைகளில் பேசுபவர்களை மிஞ்சும் வண்ணமும் சபையில் இருப்பவர்களும் சேர்ந்து பிதற்றுவதையும் மிக இயல்பாக கேட்கமுடியும். அதில் ஒலிக்கும் தொனி என்னவென்றால் இளையராஜா ஒரு “சாதனையாளன் அல்ல “என்பதான ஒரு கிளப்பின் பஜனை பாடலாக இருப்பதைக்கான முடியும். இதுவரை இசையைத் தங்கள் ஏகபோகமாக வைத்திருந்த சிறுகும்பலின் வெறுப்பு பெருமூச்சு மட்டுமல்ல மெல்லிசைமன்னர்களின் இசையின் தொடர்ச்சியாக அதை எல்லோரும் வியக்கும் வண்ணம் எடுத்துச் சென்ற இளையராஜாவை மறைமுகமாக நிராகரிக்கும் சாதிய மனநிலை கொண்ட குருட்டுப்பார்வையாகும். இசையின் முழுஅதிகாரத்தையும் தங்கள் கையில் வைத்திருப்பதாகப் பாவனை செய்து கொள்ளும் இவர்களால் தங்களுள் ஒருவரை விஸ்வநாதனுக்கு , இளையராஜாவுக்கு நிகராக கொண்டுவரமுடியவில்லை என்பது வேடிக்கை. இது இளையராஜா பெரு மதிப்பு வைத்திருக்கும் மெல்லிசைமன்னர்களை அவருக்கு எதிராக நிறுத்தும் வக்கிரம் தவிர வேறல்ல.!

பாரதி சொன்னது போல “மறைவாகப் பழங்கதைகள் பேசல்” என்பதற்கு இது போன்ற பஜனை மடங்களின் பாவலாக்கள் நல்ல உதாரணமாகும். ஆனால் மெல்லிசைமன்னரிடம் கேட்டால் அவர் “எனக்கு ஒன்னும் தெரியாது தம்பி “என்று விடுவார்.

இந்த இடத்தில் சில விஷயங்களைக் கூறியே ஆக வேண்டும். மெல்லிசைமன்னர்களின் இசையமைப்பில் போது அவர்களுடன் சில வாத்தியக்கலைஞர்களும் சேர்ந்து இருந்தே இசையமைப்பது அவர்களது முறையாகும். விஸ்வநாதன் போடும் மெட்டுக்களை அவர்கள் வாசித்துக் காண்பிப்பார்கள். அவரது உதவியாளர்கள் அவர் போடும் மெட்டுக்களை இசைக்குறிப்புகளாக எழுதிக்கொள்வார்கள். ஒரு மெட்டு எல்லோருக்கும் திருப்தி என்றவுடன் அதற்கான இடையிசையை வழங்கும் போதும் ஒரு வாத்தியக்கலைஞர் ” இதை இப்படி இசைத்தால் சிறப்பாக இருக்கும் ” என்று தனது எண்ணத்தை சொல்லும் போது விஸ்வநாதனுக்கும் அது பிடித்திருந்தால் வைத்துக்கொள்வார். இதை அவரிடம் வேலை செய்த இசைக்கலைஞர்கள் விஸ்வநாதன் மரணத்திற்கு பின் அவரது நினைவு நிகழ்ச்சிகளில் இது குறித்து பேசியிருக்கின்றன.

ஜெயா டி.வி தயாரித்த “என்றும் நம்முடன் எம்.எஸ்.வி “ என்ற விசுவநாதன் நினைவு நிகழ்ச்சியில் அவருடன் பணியாற்றிய வாத்தியக்கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் , உதவியாளர்கள் , கலைஞர்களின் பிள்ளைகள் என பலரும் தாம் நேரில் கண்ட , கேட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அதில் சிலர் விஸ்வநாதனின் படைப்பாற்றல் பற்றியும் , அவரது எளிமையுயும் கலந்து பேசினர். அதில் விஸ்வநாதன் ” அவர் லத்தீன் அமெரிக்காவில் பிறந்தது போல லத்தீன் இசை கொடுப்பார் ” [றம்பட தாமஸ் ] சிலர் பியானோ கலைஞர் இதை மேலைத்தேய இசையில் இப்படி சொல்லுவார்கள் என்று சொல்லும் போது அவர் வியப்புடன் கேட்பார் , அவர் படிக்கவில்லை அதைத் தெரிந்து கொள்வார் என்றும் கண்ணதாசனின் மகன் காந்தி கலைக்கோயில் படத்தில் இடம்பெற்ற தங்கரதம் வந்தது பாடலை ஆபோகி ராகம் என்று பாலமுரளி சொன்ன போது அப்படியா என்று பணிவுடன் கேட்டார் என்றார்.

மற்றவர்களிடம் வேலை வாங்கும் திறமையும் மிகுந்த படைப்பாற்றலும் மிக்க விஸ்வநாதன் தனக்குத் தெரியாத விஷயங்களை மற்றவர்களிடம் இருந்து அறிந்து கொண்டார் என்பதும் தனது படைப்புகளில் மற்றவர்கள் கூறும் நல்ல அம்சங்களை இணைத்துக் கொண்டார் என்பதும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். அதனாலேயே அவர் அடிக்கடி இதெல்லாம் ஒரு ” கூட்டு முயற்சி ” என்று கூறியதையும் நாம் பழைய ஒளிப்பதிவுகளிலும் , அவர் வழங்கிய பேட்டிகளிலும் நாம் கேட்கலாம்.

மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் , மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்த காலத்திலும் பின்னர் தனியே பிரிந்து இசையமைத்த போதும் மிகச் சிறந்த இசை உதவியாளர்களை தாம் இசையமைக்கும் மெட்டுக்களை இசைக்குறிப்புகளாக எழுதவும் , வாத்திய இசையை ஒருங்கமைக்கும் பணிகளை நிர்வகிக்க உதவியாளர்களையும் பயன்படுத்தி தனது பணியை இலகுவாக்கிக் கொண்டு புதிய , புதிய மெட்டுக்களை அமைப்பதில் கவனம் செலுத்தினார். அதுமட்டுமல்ல , அந்தக்காலத்தில் எல்லா இசையமைப்பாளர்களும் உதவியாளர்களை வைத்துக் கொள்ளுவதென்பது சகஜமாகவும் இருந்தது. அந்தக்காலத்து இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பிலும் அவர்களுடன் பணியாற்றிய வாத்தியக்கலைஞர்கள் மற்றும் உதவியாளர்களின் பங்களிப்பும் கணிசமான அவளில் இருந்தே வந்துள்ளன. பின்னாளில் முற்றுமுழுதாகத் தனியே எந்தவித உதவியுமின்றி தனது படைப்புகளைத் தன்னந்தனியனாக படைக்கும் ஆற்றலை இளையராஜா வளர்த்துக் கொண்டு எல்லோரையும் பிரமிக்க வைத்தார். இது குறித்து பின்னாளில் கருத்து தெரிவித்த பிரபல புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது.

” நான் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் குழல் வாசித்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரையில் இசைஞானி இளையராஜா தவிர்ந்த எல்லோரின் இசையிலும் ஏதோ ஒரு விதத்தில் பிறரது இசைப்பங்களிப்பு இருக்கிறது. இளையராஜாவின் படைப்பு முற்றுமுழுதாக அவருடைய படைப்பே! அவர் எழுதிய பின் தான் எல்லோரும் பார்க்க முடியும் “

விஸ்வநாதனுக்குப் பின்வந்த இளையராஜாவோ அவரது படைப்பில் வேறு யாரும் குறுக்கீடு செய்ய அனுமதிக்காமல் எல்லாவற்றையும் இசைக்குறிப்புகளாக எழுதிக் கொடுத்துவிடுவதை நாம் அறிவோம். இளையராஜாவைப் பொறுத்தவரையில் தனது படைப்புகள் மீதான அதீத தன்னம்பிக்கையின் வெளிப்பாடு அது. உலக இசைமேதைகளான மோஷார்ட் , பீத்தோவன் போன்றவர்களும் அப்படித்தான் தங்கள் படைப்பை எழுதினார்கள்.

மெல்லிசைமன்னரின் இந்த ” அதிதீவிர ” ரசிகர்கள் உலக இசைகளோடு மெல்லிசைமன்னரை தொடர்புபடுத்திப் பேசினாலும் அவரது ஆதர்சம் ஹிந்தி இசைத்தான் என்பதை அவரது பெரும் பாலான பாடல்களை உதாரணம் காட்டிக் கூற முடியும். என்னென்ன பாடல்களையெல்லாம் பிறநாட்டுப்பாடல்கள் என்று சொல்கிறோமோ அவையெல்லாம் அவர் ஹிந்தியிசையில் பெற்றுக்கொண்டார் என்பதையும் நிறுவ முடியும். கலா நுடபத்திறனுடன் அவர் அவற்றை தனது கைத்திறனால் வெகுசாமர்த்தியமாக கலந்து கொடுத்தார். தான் பாடிப்பாடி செதுக்கிய மெட்டுக்களை அழகு மின்னும் வண்ணம் வெளிப்படுத்த அதன் அலங்கார வெளிப்பாடுகளாக காட்டுவதற்கே தான் அனுபவித்த பிற இசையமைப்பாளர்களின் இசைத்துளிகளின் சாரங்களை அங்கங்கே இழைத்து கொடுத்தார்.

மெல்லிசைமன்னர்களின் இசையில் இன்னன்ன இசைத்தொடர்புகள், அதன் குணவேறுபாடுகள், அதனிலிருந்து வேறுபடும் சிறப்பியல்புகள், அதன் மூல வடிவங்கள் என்பன பற்றிய அறிவில்லாதவர்கள் “அதிதீவிர ” ரசிகர்களே ஆவர்.

பழைய தமிழ் சினிமாப்பாடல்கள் எல்லாம் நல்ல தமிழிசை என்ற அறியாமை நம் மத்தியில் சிலருக்கு உண்டு . இவர்களுக்குத் தமிழிசை என்றாலே சினிமாப்பாடல் தான் என்பதை நினைக்கும் போது இவர்களின் அறியாமையை நாம் புரிந்து கொள்ளலாம் தமிழுக்கு அப்பால் உள்ள இசைவகைகள் ,மற்றும் உலக இசை அனுபவமே இல்லாத. மட்டுப்படுத்தப்பட்ட, குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டாத இசைகேட்கும் வாய்ப்புகள் பெற்றதாகவே நமது சமூகம் இருந்திருக்கிறது. நம்மவரில் பெரும்பானமையானவரின் பாடல் ரசனை என்பது சினிமாப்பாடல்களாகவே இருக்கிறது. அதன் காரணமாக தாம் நினைப்பதே உலகம் என நினைக்கின்றனர்..

உண்மையில் இந்த ” ரசிகப்பெருமக்களின் ” பொன்மொழிகள் அனைத்தின் சாராம்சம் என்பது இத்தனை இசைநுணுக்கங்களும் மெல்லிசைமன்னரின் சொந்தபடைப்பு என்பதும் வெளியிலிருந்து அவர் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுமேயாகும். இது உண்மைதானா ? மெல்லிசைமன்னர் தனது படைப்புகளில் எதையுமே எடுத்துக் கொள்ளவில்லையா? அவை முழுவதும் அவரது மூளையில் உதித்த இசைமுத்துக்களா ? புதிய சுவையுணர்வை பெறவில்லையா? என்பதை கால , தேச, அழகியல் நோக்கில் ஆராய்ந்தால் விடை கிடைத்து விடும்.

மெல்லிசைமன்னரின் “வெறிபிடித்த” ரசிகர்களாகத் தம்மைக்காட்டிக் கொள்ளும் சில இவ்விதம் பிதற்றினாலும் , இவை குறித்து மிகத் தெளிவாக மெல்லிசைமன்னர் பலமுறை பேசியிருக்கிறார். தனது வழிகாட்டியாக மெல்லிசைமன்னர் கருதிய ஹிந்தி இசையமைப்பாளர் நௌசாத் பற்றி அவர் கூறிய கூற்றிலிருந்து அதனை நாம் குறிப்பிடலாம். அவர் பின்வருமாறு கூறுகின்றார்.

” நம்மை வட இந்தியாவில் ஒரு இசை நிகழ்சசி செய்யக்கேட்டார்கள். நௌசாத் தலைமை தாங்க வேண்டும் என்றோம் . நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் நௌசாத் வீடு சென்றோம். பழைய இசைத்தட்டுக்கள் எல்லாம் வைத்திருந்தார். அந்தக்காலத்தில் வெளிவந்த எல்லா இசையமைப்பாளர்களது [ தமிழ், தெலுங்கு , கன்னடம் ] இசைத்தட்டுக்களையும் வைத்திருந்தார்.நமக்குத் புத்திமதியும் வழங்கினார். ” கவிஞர்கள் என்றால் எல்லோருடைய கவிதைகளையும் படிக்க வேண்டும் : இசையமைப்பாளர்கள் என்றால் எல்லோருடைய இசையையும் கேட்க வேண்டும். அப்படியென்றால் தான் முன்னேற முடியும் ” என்றார். நான் அவரது ரசிகன். எனது பாடல்களைக் கேட்டு கடிதம் எழுதுவார். நானும் எழுதுவேன். சென்னை வந்தால் எனது வீட்டில் தான் தங்குவார்.

மெல்லிசைமன்னரின் இசையில் நௌசாத் இசையின் பாதிப்புக்களை நாம் துல்லியமாகக் கேட்க முடியும். தமிழ் திரையின் புதுமை முன்னோடியாக விளங்கியவரும் , மெல்லிசைமன்னர்களின் குருநாதருமான சி.ஆர். சுப்பராமனின் இசைப்பாணி என்பதே நௌஸாத்தின் இசைப்பாணி ஆகும். அந்த வகையில் மெல்லிசைமன்னர்களின் இசையில் நௌசாத்தின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பது இயல்பானதே . மெல்லிசைமன்னரின் இசையில் பிறரது பாதிப்பு இருப்பதென்பது அவை நேரடியாகத் தெரிகிறது என்று அர்த்தமல்ல. நெருப்புப்பொறியாக பறந்து வேகத்தில் மறையும் இசைத்துணுக்குகளையெல்லாம் விரித்து,விரித்து ஆலாபனைகளாக்கி இனிய பாடல்களாக்குவதும் அவற்றை பல சமயங்களில் தொனிகளாகவும் வெளிப்படுத்தும் அற்புதங்களை நாம் காணமுடியும்.

அவை பாடலின் ஆரம்பமாகவும் , இடையிசையாகவும் , கோரசாகவும் , வாத்திய இசையாகவும் , ஹம்மிங்காகவும் என பலவிதங்களிலெல்லாம் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். சில பாடல்கள் ஹிந்தி திரைப்படங்களின் டைட்டில் இசையிலிருந்தும் , பின்னனணி இசையிலிருந்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அவற்றை தமது ஆழ்ந்த ரசிப்பாலும் ,நுணுக்கரிய பார்வையாலும் அவற்றோடுணைந்து பாடிப்பார்ப்பதாலும் , அவர்கள் கையாண்ட மூலப்பாடல்களின் சுருதியும் , மெல்லிசைமன்னர்கள் கையாண்ட சுருதி மாறுபாடுகளும், வெவ்வேறாகவும் , சில சமயங்களில் அவற்றின் தாளநடை வித்தியாசமானவையாகவும் இருந்தாலும் அவற்றை வாத்திய இசையில் இசைத்து பார்ப்பதாலும், பாடிப்பார்ப்பதாலும் நுட்பத்திறன் உடையோர் இலகுவில் கண்டுபிடித்து விடலாம்

அவர்களது இசையில் ஊடுருவி நிற்கும் பிற இசையமைப்பாளர்களது இசை கூறுகளை தர விளைவதே இப்பகுதியின் நோக்கம்.

1950 களிலிருந்து இசையமைக்க ஆரம்பித்த மெல்லிசைமன்னர்கள் 1960களின் நடுப்பகுதியில் பிரிந்து சென்ற பின்பும் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் தனியே 1980களின் இறுதி வரை உற்சாகத்துடன் படைப்பில் ஈடுபட்ட பேராற்றல்மிக்க படைப்பாளியாவார். ஒவ்வொரு பத்தாண்டுகளில் வரிசைப்படி அவர் இசையமைத்த பாடல்களில் ஹிந்தி திரையிசையின் தாக்கத்தை கேட்க முடியும் என்ற வகையில் அந்தப் பாடல்கள் தரப்படுகின்றன. மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் ஹிந்தி இசையிலிருந்து பெற்றவை:

1950 களில் வெளிவந்த பாடல்கள்
01 எல்லாம் மாயை தானா – தேவதாஸ் [1953] பாடியவர் : ஆர்.பாலசரஸ்வதி தேவி – இசை; சி.ஆர்.சுப்பராமன் 02 ஆனந்தம் ஆனந்தம் ஆனேன் – ஜெனோவா 1953 – AB கோமளா – இசை: விஸ்வநாதன் 03 பரிதாபமே இல்லையா – ஜெனோவா 1953 – லீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 அன்பே வா அழைக்கின்ற எந்தன் மூச்சே – அவன் 1953 – AM ராஜா + ஜிக்கி – இசை: சங்கர் ஜெய்கிஷன் 05 தேவலோக தேவமாதா – ஜெனோவா 1953 – P லீலா – இசை: விஸ்வநாதன் 06 துணை நீயே தேவ மாதா – ஜெனோவா 1951 – பி.லீலா – விஸ்வநாதன் 07 சந்தோசம் வேணுமென்றால் – தேவதாஸ் 1953 – பாலசரஸ்வதி தேவி – இசை: விஸ்வநாதன் 08 செந் தமிழ் தென் மொழியாள் – மாலையிட்ட மங்கை 1958 – மகாலிங்கம் + கோமளா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 09 இரை போடும் மனிதருக்கே – பதிபக்தி 1958- P.சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. *** “இரைபோடும் மனிதருக்கே ” பாடலில் வரும் சாரங்கி இசை ஹிந்திப் பாடலின் சாரங்கி இசையும் ஒரே மாதிரி இருக்கும் 10 என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் – தங்கப்பதுமை 1959 – பி.சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி. 11 தென்றல் உறங்கிய போதும் – பெற்ற மகனை விற்ற அன்னை 1957 – AM ராஜா + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 12 ஆசையும் என் நேசமும் – குலேபகாவலி 1957 – கே.ஜமுனாராணி குழுவினர் – விஸ்வநாதன் ராமமூர்த்தி. 13 கசக்குமா இல்லை ருசிக்குமா – பத்தினித் தெய்வம் 1957 – TMS + சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி 14 காமுகர் நெஞ்சில் நீதியில்லை – படம்: மகாதேவி 1957 –ஜமுனாராணி -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 15 சின்ன சின்ன இழை பின்னி பின்னி வர – புதையல் 1957 – பி.சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த் 16 அன்னம் போல பெண்ணிருக்க – மாலையிட்ட மங்கை 1958 – பி.சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி 17 துள்ளித் துள்ளி அலைகள் எல்லாம் – தலைக்கொடுத்தான் தம்பி 1957 – A.M.ராஜா + சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி 18 தென்றல் உறங்கிய போதும் – பெற்ற மகனை விற்ற அன்னை 1953 – AM ராஜா + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 19 உனக்காக எல்லாம் உனக்காக – புதையல் 1957 – JP சந்திரபாபு – விஸ்வநாதன் ராமமூர்த்தி.

1960 களில் வெளிவந்த பாடல்கள்
20 நடக்கும் என்பார் நடக்காது – படம்: பணக்காரங்க குடும்பம் 1963 – TMS -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 21 நாளாம் நாளாம் திருநாளாம் – படம்: காதலிக்க நேரமில்லை 1964 –BPS சுசீலா -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 22 அழகே வா அறிவே வா – ஆண்டவன் கட்டளை 1963- சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 23 சிலர் குடிப்பது போல் நடிப்பார் – சங்கே முழங்கு ௧௯௬௭ – LR ஈஸ்வரி – இசை விஸ்வநாதன் 24 உன்னை நான் சந்தித்தேன் – ஆயிரத்தில் ஒருவன் 1965 – பி.சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 25 குங்குமப் பொட்டின் மங்களம் – குடியிருந்த கோயில் 1967- TMS + பி.சுசீலா – இசை விஸ்வநாதன் 26 அனுபவம் புதுமை – காதலிக்க நேரமில்லை 1962- BPS + P.சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 27 உங்க பொன்னான கைகள் – காதலிக்க நேரமில்லை 1962- BPS + குழுவினர் – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 28 சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் – பாவமன்னிப்பு 1961 – TMS – விஸ்வநாதன் ராமமூர்த்தி 29 தொட்டால் பூ மலரும் – படகோட்டி 1964 – TMS சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி 30 கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு – பந்தபாசம் 1963 – TMS + BPS – விஸ்வநாதன் ராமமூர்த்தி 31 யாருக்கு மாப்பிள்ளை யாரோ – பார்த்தால் பசி தீரும் 1962- பி.சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 32 மௌனமே பார்வையால் – கொடிமலர் 1968 – BPS – இசை:M .S.விஸ்வநாதன் [ நல்ல இன்ஸபிரேசன்] 33 வண்ணக்கிளி சொன்ன மொழி – தெய்வத்தாய் 1964 -TMS + சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 34 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் – பஞ்சவர்ணக்கிளி 1965- சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 35 முத்தான முத்தல்லவோ – நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 36 நாங்க மன்னருமில்லை – ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் 1963 – GK வெங்கடேஷ் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 37 வாழ நினைத்தால் வாழலாம் – பலே பாண்டியா 1962 – TMS BPS சுசீலா – ஜமுனாராணி – விஸ்வநாதன் ராமமூர்த்தி 38 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – கற்பகம் 1962 – Pசுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி 39 தேரோடும் எங்கள் [ பாகப்பிரிவினை ] 40 காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே – பாக்கியலட்சுமி 1960 – சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. 41 பாலிருக்கும் பழமிருக்கு – பாவமன்னிப்பு 1960 – சுசீலா + MSV – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 42 உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது – கர்ணன் 1964 – சீர்காழி – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. 43 யார் அந்த நிலவு – சாந்தி 1967- TMS – இசை விஸ்வநாதன் ஹிந்திப்பாடலின் சாரங்கி இடையிசை இந்தப்பாடலின் இடையிசையை நினைவூட்டும் 44 கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு -பந்தபாசம் 1963- TMS+ BPS – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 45 கண்கள் இரண்டும் உன்னைக்கண்டு தேடுமோ -மன்னாதி மன்னன் 1960- சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. 46 இந்த நிலவை நாம் பார்த்தால் – பவானி – TMS BPS P சுசீலா LR ஈஸ்வரி – விஸ்வநாதன் 47 கண்ணுக்கு குலம் ஏது – கர்ணன் 1964- பி.சுசீலா – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 48 முத்துக்களோ கண்கள் – நெஞ்சிருக்கும்வரை 1966- TMS + பி.சுசீலா – இசை விஸ்வநாதன். இந்தப்பாடல் படே குலாம் அலி கான் பாடிய ஹசல் இசையில் MeghMalkar ராகத்தில் பாடிய ஒரு பாடலிலிருந்து வந்ததே என்பர். 49 சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் பாவமன்னிப்பு – TMS – – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி . 50 நாளாம் நாளாம் திருநாளாம் – காதலிக்க நேரமில்லை 1964 – P .B.ஸ்ரீனிவாஸ் + பி.சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி . 51 மஞ்சள் முகம் நிறம் மாறி – கர்ணன் 1964 – பி.சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி 52 ஒருவர் வாழும் ஆலயம் – நெஞ்சி ஓர் ஆலயம் 1962 – TMS + L R ஈஸ்வரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 53 ஒரே பாடல் உன்னை அழைக்கும் – எங்கிருந்தோ வந்தான் 1972 – TMS – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி 54 என் அன்னை செய்த பாவம் – சுமைதாங்கி – பி.பி. ஸ்ரீநிவாஸ் 55 பூமாலையில் ஓர் மல்லிகை – ஊட்டி வரை உறவு – T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா என்ற பாடலை 56 எங்களுக்கும் காலம் வரும் ” [ படம்: பாசமலர் ] T.M.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி 57 அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை – நெஞ்சம் மறப்பதில்லை 1963 – PBS + ஜானகி – விஸ்வநாதன் ராமமூர்த்தி 58 காதல் நிலவே கண்மணி ராதா – ஹல்லோ MR ஜமீன்தார் 1963 – PBS – விஸ்வநாதன் ராமமூர்த்தி 59 சொல்லத்தான் நினைக்கிறேன் ” பாடல் சாயல் 60 பாலிருக்கும் பழமிருக்கும் – பாவ மன்னிப்பு 1961 – MSV + சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி இருபாடலிலும் வரும் எக்கோடியன் இசை ஒரே மாதிரி இருக்கும்.SDB 61 ஊர் எங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் – சாந்தி 1967 – சுசீலா -இசை : விஸ்வநாதன் 62 காதல் சிறகை காற்றினில் விரித்து – பாலும் பழமும் 1961 – சுசீலா + குழுவினர் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 63 பாட்டு வரும் பாட்டு வரும் – நான் ஆணையிட்டால் 1966 – TMS + சுசீலா – இசை விஸ்வநாதன் 64 ஹல்லோ மிஸ் எங்கே போறீங்க – என் கடமை – – TMS + சுசீலா – இசை விஸ்வநாதன் 65 நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா – காதலிக்க நேரமில்லை 1964 – ஜேசுதாஸ் + சுசீலா + ஈஸ்வரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 66 உன்னைத்தான் நானறிவேன் – வாழ்க்கைப்படகு 1962 – சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 67 என் உயிர்த்த தோழி கேளடி சேதி – கர்ணன் 1964 – சுசீலா + குழுவினர் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 68 பட்டத்துராணி பார்க்கும் பார்வை – சிவந்த மண் 1970 – எல்.ஆர்.ஈஸ்வரி =- இசை: எம்.எஸ் விஸ்வநாதன் 69 துள்ளுவதோ இளமை – குடியிருந்த கோயில் 1969- TMS+ ஈஸ்வரி + குழுவினர் – இசை : விஸ்வநாதன் மெட்டில் ” பட்டத்துராணி ” பாடலும் , தாள அமைப்பு மற்றும் வாத்திய அமைப்பில் ” துள்ளுவதோ இளமை ” பாடலின் அமைப்பையும் இந்த ஹிந்தியப்பாடலில் கேட்கலாம் மேல் சொன்ன பாடலின் பாதிப்பை துள்ளுவதோ இளமை என்ற பாடலும் விசுவநாதன் பின்னாளில் இசையமைத்த நினைத்தால் இனிக்கும் படத்தில் வரும் எங்கேயும் எப்போதும் பாடலில் ” காலம் சல்லாபக் காலம் ” என்ற வரிகளை நினைவூட்டும் பகுதிகளும் வரும். 70 தங்கச்சி சின்ன பொண்ணு – கருப்பு பணம் 1964- சீர்காழி + ஈஸ்வரி + குழுவினர் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 71 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் – படகோட்டி 1964 – TMS – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 72 நடக்கும் என்பார் நடக்காது – பணக்காரக்குடும்பம் 1963 – TMS – விஸ்வநாதன் ராமமூர்த்தி கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – பறக்கும் பாவை 1969 – TMS சுசீலா – விஸ்வநாதன் 73 கண் போன போக்கிலே கால் போகலாமா – பணம் படைத்தவன் 1965 – TMS – விஸ்வநாதன் ராமமூர்த்தி 74 நடக்கும் என்பார் நடக்காது – பணக்காரக்குடும்பம் 1963 – TMS – விஸ்வநாதன் ன் ராமமூர்த்தி 75 உலகம் பிறந்தது எனக்காக – பாசம் 1962 – TMS – விஸ்வநாதன் ராமமூர்த்தி 76 ராதைக்கேற்ற கண்ணனோ – சுமைதாங்கி 1963 – எஸ்.ஜானகி – விஸ்வநாதன் ராமமூர்த் 77 காதலிலே பற்று வைத்தாள் – பார் மகளே பார் 1963 – பி.சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி 78 ஆறோடும் மண்ணில் எங்கும் – பழனி 1963 – TMS + BPS + சீர்காழி – விஸ்வநாதன் ராமமூர்த்தி. தமிழ் பாடலின் இடையே வரும் “போராடும் வேலையில்லை ” என்ற பகுதி ஹிந்திப்பாடலின் மேட்டை ஒத்திருக்கும் .பாடல் முடிவில் வரும் தாள அமைப்பு தேவதாஸ் படத்தில் வரும் ” சந்தோசம் தரும் சவாரி ” தரும் பாடலை ஞாபகப்படுத்துவதை கேட்கலாம். 79 பச்சை மரம் ஒன்று – ராமு 1966 – BPS – விஸ்வநாதன் இந்தப்பாடலில் வரும் மவுத் ஓர்கன் வாசிப்பு ஹிந்தி பாடலை ஒத்திருக்கும். 80 மாதவிப் பொன் மயிலாள் – இருமலர்கள் – 1966- TMS – இசை : விஸ்வநாதன்

1970 களில் வெளிவந்த பாடல்கள்:
81 அடியேனைப் பாரம்மா பிடிவாதம் – வணக்கத்துக்குரிய காதலியே 1976- ஜோலி ஏப்ரகாம் – இசை: விஸ்வநாதன். 82 வழி வழியே வந்த தமிழ் பண்பாடு – நம்ம வீட்டு லட்சுமி 1970- சுசீலா – இசை: விஸ்வநாதன் 83 மஞ்சள் இட்ட நிலவாக – அவள் தந்த உறவு 1977- சுசீலா – இசை: விஸ்வநாதன் 84 ஒரு ராஜா ராணியிடம் – சிவந்த மண் 1971 – TMS + சுசீலா – விஸ்வநாதன் 85 யாதும் ஊரே யாவரும் கேளிர் – நினைத்தாலே இனிக்கும் 1978- SPB + பி.சுசீலா – இசை விஸ்வநாதன் 86 ஆனந்தம் விளையாடும் வீடு – நினைத்தாலே இனிக்கும் 1978- TMS + பி.சுசீலா – இசை விஸ்வநாதன் 87 பூமழை தூவி வசந்தங்கள் – நினைத்ததை முடிப்பவன் 1973- TMS – இசை விஸ்வநாதன் 88 மௌனம் கலைகிறது – என்னைப்போல் ஒருவன் 1978- TMS – இசை விஸ்வநாதன 89 கல்யாண சந்தையிலே – சுமதி என் சுந்தரி 1972 – சுசீலா – விஸ்வநாதன் 90 நான் பார்த்தால் பைத்தியக்காரன் – உழைக்கும் கரங்கள் 1974 – TMS – விஸ்வநாதன் 91 ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம் – சுமதி என் சுந்தரி 1972 – TMS + சுசீலா – விஸ்வநாதன் 92 என்னை விட்டால் யாருமில்லை – நாளை நமதே 1975 – ஜேசுதாஸ் – இசை : விஸ்வநாதன். 93 வம்சாயி காதல் கவிதைகள் – உலகம் சுற்றும் வாலிபன் 1973 – TMS + P சுசீலா – இசை: விஸ்வநாதன் 94 ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு – காவியத்தலைவி 1973 -P சுசீலா – இசை: விஸ்வநாதன் 95 சிரித்து வாழ் வேண்டும் – உலகம் சுற்றும் வாலிபன் 1973 – TMS – இசை : விஸ்வநாதன் 96 தமிழ்ப்பாடலின் பின் இசையை உற்று நோக்கினால் ஒற்றுமையை அவதானிக்கலாம். 97 மல்லிகை என் மன்னன் மயங்கும் – படம்: தீர்க்க சுமங்கலி 1972 – வாணி -இசை : விஸ்வநாதன். 98 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்- தெய்வ மகன் 1968 – TMS + சுசீலா – விஸ்வநாதன் 99 யாதும் ஊரே யாவரும் கேளிர் – நினைத்தாலே இனிக்கும் 1978 – SPB + சுசீலா – விஸ்வநாதன் 100 உனக்காக எல்லாம் உனக்காக – புதையல் 1957 – JP சந்திரபாபு – விஸ்வநாதன் ராமமூர்த்தி 101 அன்பு வந்தது என்னை ஆழ வந்தது – சுடரும் சூறாவளியும் 1972 – SPB – விஸ்வநாதன் 102 என் ராசாவின் ரோஜா முகம் – சிவகாமியின் செல்வன் 1974 – சுசீலா – விஸ்வநாதன் 103 அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் – அன்பைத்தேடி 1975 – ரோஜாரமணி – விஸ்வநாதன் 104 திருமுருகன் அருகினில் – மேஜர் மீனாட்ச்சி 1976- SPB+ வாணி – இசை விஸ்வநாதன் 105 ஊஞ்சலுக்குப் பூ சூட்டி – அவன் தான் மனிதன் 1975- TMS – இசை விஸ்வநாதன் 106 காதல் சரித்திரத்தை – என்னைப்போல்ஒருவன் 1974- TMS + சுசீலா – இசை விஸ்வநாதன் 107 மாந்தோரண வீதியில் -பாட்டும் பரதமும் 1974- ட்மஸ்+ சுசீலா – இசை விஸ்வநாதன். 108 வானிலே மேடை அமைந்தது – நினைத்தாலே இனிக்கும் – SPB 109 எங்கேயும் – நினைத்தாலே இனிக்கும் – SPB 110 ஆட்டுவித்தால் யாரொருவர் – அவன் தான் மனிதன் 1975- TMS – இசை விஸ்வநாதன் 111 மலரே குறிஞ்சி மலரே – படம்: DR சிவா 1975 – ஜேசுதாஸ் + ஜானகி -இசை : விஸ்வநாதன் 112 ஒத்தையடி பாதையிலே – நிமிர்ந்து நில் – 1973 – TMS + சுசீலா – இசை : விஸ்வநாதன் 113 அம்மம்மா தம்பி என்று நம்பி – ராஜபார்ட் ரங்கதுரை 1974 – TMS – விஸ்வநாதன் 114 எத்தனை மனிதர்கள் உலகத்திலே – நீதிக்குத்தலைவணங்கு 1974 – ஜெயச்சந்திரன் – விஸ்வநாதன் 115 தங்கத்தில் முகம் எடுத்து – மீனவ நண்பன் 1975 – ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் – விஸ்வநாதன் 116 காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் – வாழ்ந்து காட்டுகிறேன் 1975 – வாணி ஜெயராம் – விஸ்வநாதன்

1980 களில் வெளிவந்த பாடல்கள்:
117 தேடும் கண்பார்வை தவிக்க – மெல்லத் திறந்தது கதவு 1986- SPB எஸ்.ஜானகி – இசை :MSV + இளையராஜா 118 சிப்பியிருக்குது முத்தமிருக்குது – படம்: வறுமையின் நிறம் சிவப்பு 1980 – SPB + ஜானகி -இசை : விஸ்வநாதன் .

இந்தப்பாடல்கள் எல்லாம் நேரடியான தழுவல்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இந்தப்பாடல்களுக்கான இசை உந்துதல் இடையிசையாக , ஆரம்ப மெட்டாக , ஹம்மிங்காக என பலவிதங்களில் மெல்லிசைமன்னர் இசையில் ஊடுருவி நிற்கின்றன.

தமக்கு வெளியே உள்ள நல்லிசைகளை தேனீ போல சேகரித்து ,அவற்றை ஆங்காங்கே கலந்து தரும் ஒரு மெல்லிசைமன்னர்களின் ஆற்றலை எண்ணி வியக்கிறோம். அதே போல மெல்லிசைமன்னர்களின் படைப்பாற்றலின் மேதமையால் அவரது சமகால இசையமைப்பாளர்களும் பின் வந்த இசையமைப்பாளர்களும் அவரது படைப்புக்களை உள்வாங்கிய அ திசயத்தையும் காண்கிறோம்.

[ தொடரும் ]